வெளிநாட்டுத் தலையீடுகளை அனுமதியேன் – மகிந்த சூளுரை
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளிநாடுகள் முயற்சிப்பதாகவும், அதற்குத் தான் ஒருபோதும், இடமளிக்க மாட்டேன் என்றும் சூளுரைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ‘மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு உள்நாட்டு சக்திகளும், வெளிநாட்டு சக்திகளும் முயற்சிக்கின்றன.
நாட்டின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பல்வேறு கட்சிகளுடனும் நான் பல்வேறு உடன்பாடுகளை செய்து கொள்ள வேண்டியதில்லை. எல்லோருக்கும் பொதுவானது மகிந்த சிந்தனை ஒன்றுதான்.
இந்த தேர்தல் குழப்பம்மிக்க காலத்துக்கு பின்நோக்கிப் போகப் போகிறோமா அல்லது உறுதியான வலுவான எதிர்காலம் நோக்கி, முன்நோக்கிச் செல்லப் போகின்றோமா என்பதை தீர்மானிப்பதாக அமையும்.
அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், சிவில் சமூகத்தினருடனான பரந்துபட்ட கலந்துரையாடலை நடத்தி அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு என்ற தேர்தல் அறிக்கை சிங்களத்தில் 118 பக்கங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.