தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது – மாவை சேனாதிராசா
சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதில்லை என்றும், கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களைக் கோருவதென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
வவுனியாவில் இன்று காலை முதல் பிற்பகல் வரை நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் அறிவிக்கும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் வாக்களிக்க வேண்டாம் என்று தமிழ் மக்களைக் கோருவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.
தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிடும்.
மருத்துவ உதவிகளுக்காக இரா. சம்பந்தன் வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதியான முடிவை அறிவிக்கும் என்றும்” அவர் தெரிவித்தார்.