மேலும்

சந்திரிகாவின் காலத்தில் தான் 11,500 படையினர் கொல்லப்பட்டனர் – பௌத்த பிக்கு பதிலடி

Chandrika-Kumaratungaஒட்டுமொத்த போரிலும் கொல்லப்பட்ட 23 ஆயிரம் படையினரின் பாதிப் பேர், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் காலத்தில் தான், உயிரிழந்தனர் என்று, சிறிசம்புத்தலோக விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர், நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

அங்கு அவர், தாமே போரின் 75 வீதத்தை முடித்து வைத்ததாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உரிமை கோரியது குறித்து கருத்து வெளியிடுகையில்,

“போரில் 23ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர். இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள், சந்திரிகா குமாரதுங்கவின் பதவிக்காலத்திலேயே உயிரிழந்தனர்.

அவரது ஆட்சிக்காலத்தில் தான் முக்கியமான பொருளாதார இலக்குகளான, மத்திய வங்கி, கொலன்னாவ எண்ணெய்க் குதம், கட்டுநாயக்க விமான நிலையம் என்பன தாக்கப்பட்டன.

போர் வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாக இருந்தாலும், கொழும்பிலுள்ள மக்கள் அதனால் பெரிதும் பாதிப்புகளை சந்தித்தனர்.

ரெலிகொம், மத்திய பேருந்து நிலையம், மத்திய வங்கி, மருதானை, கலதாரி குண்டுவெடிப்புகளின் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே இதற்கெல்லாம் முடிவு கட்டினார்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *