அரசியல் வங்குரோத்து அடைந்து விட்டார் மகிந்த – மைத்திரி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்து விட்டார் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே மாதிரியான உரையையே நிகழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.
மாவனெல்லவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“முன்பொதுபோதும் இல்லாத வகையில், தனது மூன்றாவது பதவிக்காலத்துக்காக போட்டியிடும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டார்.
இதனால், 2010ம் ஆண்டு அதிபர் தேர்தலில் இருந்து. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரேவிதமான உரைகளையே அவர் நிகழ்த்தி வருகிறார்.
பதாகைகள் மற்றும் தேர்தல் விளம்பரங்களுக்காக அரசாங்க சொத்துகளையும், இராணுவம் மற்றும் காவல்துறையினரை தனது தேர்தல் பரப்புரைகளுக்காகவும் மகிந்த ராஜபக்ச தவறாகப் பயன்படுத்தி வருகிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா அதிபர் நிகழ்த்திய உரைகளையே மீண்டும் மீண்டும் அரச தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன.
திறைசேரியினால் 63 அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் மொத்த நிதியில், 60 வீதம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள் வசம் உள்ள பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.
63 அமைச்சர்கள், 57 அமைச்சர்களுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நிதியை வீண் விரயம் செய்கிறது. ஜனவரி 8ம் நாளுக்குப் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்கு குறைக்கப்படும்.
இந்த தேர்தலில் வெளிநாட்டுச் சூழ்ச்சிகள் நடப்பதாக அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது.
ஆனால், 2005ம் ஆண்டு தமிழர்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கு, புலம்பெயர் தமிழர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ 50 மில்லியன் ரூபாவைச் செலவிட்டவர் தான் மகிந்த ராஜபக்ச.
ஊழல்கள், மோசடிகளை வெளிப்படுத்த 2011ம் ஆண்டு நான் முயற்சித்த போது, அவர் என்னை அனுமதிக்கவில்லை” என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.