பதவியை விட்டு விலகிய இரு பிரதியமைச்சர்களும் மைத்திரிக்கு ஆதரவு
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் வகித்து வந்த பிரதியமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.திகாம்பரம், வே.இராதாகிருஸ்ணன் ஆகிய இவரும், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது கொழும்பில் ஐதேக தலைமையகத்தில் நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் தமது இந்த முடிவு குறித்து அவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தாம் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்த பத்து கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகளை அவர் ஏற்றுகொண்டார் என்றும், அவருக்கு தமது பூரண ஆதரவை வழங்குவோம் என்றும் மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
அதேவேளை, எமக்கு பல பிரச்சினைகள் இருந்தும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் தீர்வுகளை பெற்று கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து மலையக மக்களை ஏமாற்றி கொண்டிருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம் குறிப்பிட்டார்.
“எமக்குள்ள வாக்குகளை பயன்படுத்தி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அமோக வெற்றிபெறச் செய்வோம்.
எதிரணியுடன் இணைந்துள்ள எமக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன.
எனவே பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.