மேலும்

பீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் – சரத் பொன்சேகாவின் பேரம்

Sarath-Fonsekaபீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சரத் பொன்சேகா ஆதரவு அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஆதரவளிப்பதாக, முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா கடந்தவாரம் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றையும் செய்து கொண்டுள்ளார்.

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மைத்திரிபால சிறிசேன, தாம் ஆட்சிக்கு வந்ததும், சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட ஜெனரல் பட்டம் உள்ளிட்ட அனைத்து இராணுவ விருதுகள், சலுகைகளையும் மீள வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அவருக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

இந்தநிலையில், சரத் பொன்சேகா தனக்கு பீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும் என்று கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்மை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்றும், ரணில் விக்கிரமசிங்கவிடம், சரத் பொன்சேகா கோரியிருக்கிறார்.

அரசியலமைப்பு மாற்றங்களின் போது, தனக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், உடனடியாகவே, போரில் ஆற்றிய பங்களிப்புக்காக, சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் என்ற உயர் இராணுவ பட்டம் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா இராணுவத்தில் இதுவரை பீல்ட் மார்சல் என்ற உயரிய பட்டம் எவருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *