கோப்புகள் குறித்து குத்துக்கரணம் அடித்தார் மகிந்த
கோப்புகள் குறித்து தான் கூறியதை ஊடகங்கள் தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதாக குத்துக்கரணம் அடித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
அலரி மாளிகையில் இன்று ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 23ம் நாள் அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச,
“அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற அமைச்சர்களின் கோப்புகள் என்னிடம் உள்ளன. ஆனால் நான் அவற்றைப் பயன்படுத்தமாட்டேன். நான் அத்தகைய மனிதனில்லை” என்று மிரட்டும் தொனியில் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் மேடைகளில் கடும் சர்ச்சையை உருவாக்கியிருந்த நிலையில், இன்று ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பில் அதற்கு புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ச.
“அமைச்சர்களால் அமைச்சரவை கூட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படும் கோப்புகள் குறித்தே நான் அன்று கூறியிருந்தேன்.
அமைச்சரவைப் பத்திரமொன்றை வெளியிட முடியாது தானே. அவை இரகசியமானவை தானே.
நான் சொன்னதை ஊடகங்கள் தவறாக விளங்கி வெளியிட்டன.
எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு இதைப்பற்றி விசாரித்திருந்தால் விளக்கம் கொடுத்திருந்திருப்பேன்.
த்துடன், இம்முறை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுடனேயே நான் போட்டியிடுகின்றேன்.
நான் போட்டியிடுவது சந்திரிகாவுடனேயே. இது மங்கள – சந்திரிகா கூட்டணியேயாகும். ரணிலுக்கு இன்னும் சில நாட்களில் டும் தான்.
என்னுடன் கடுமையாகப் போட்டியிடத் தகுதிவாய்ந்தவர் ரணில் என்றே நான் நினைக்கிறேன்.
வீதிகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் தேர்தலுக்காக வைக்கப்பட்டவை அல்ல. அவை எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வைக்கப்பட்டவை.
வேட்புமனுத் தாக்கல் நாளுக்குப் பின்னர் சுவரொட்டிகள் பதாதைகள் அனைத்தும் அகற்றப்படும்.
தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.