சிறிலங்கா அரசுக்கு டோவல் கொடுத்துள்ள ‘பலமான’ செய்தி
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சிறிலங்கா அரசாங்கத்துக்கு ‘பலமான’ செய்தி ஒன்றைக் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காலியில் நேற்று ஆரம்பமான காலி கலந்துரையாடல் என்ற, கடற்பாதுகாப்பு மாநாட்டில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் முக்கிய உரை நிகழ்த்தியிருந்தார்.
அவர் தனது உரையில், இந்தியப் பெருங்கடலின் மூலம் செழிப்பை அனுபவிக்க எதிர்பார்க்கும் நாடுகள், இந்தப் பிராந்தியத்தில் அமைதியைக் குழப்பக் கூடாது என்று எடுத்துக் கூறியிருந்தார்.
1971ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபையின் 49வது அமர்வில், இந்தியப் பெருங்கடல் பகுதியை அமைதிப் பிராந்தியமாக பிரகடனப்படுத்தக் கோரி, இலங்கை கொண்டு வந்த தீர்மானத்தைச் சுட்டிக்காட்டியிருந்த அஜித் டோவல், இந்த நிலைப்பாடு தற்போதும் பொருந்தும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையில் சீனாவின் இராணுவத் தலையீடுகள் அதிகரித்துள்ளது குறித்து, குறிப்பாக, சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு பயணங்கள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ள சூழலில் தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய மாநாட்டில் அஜித் டோவல் சீன நீர்மூழ்கிகள் விவகாரம் குறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தையும் கூறாவிட்டாலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மூலம், செழிப்பை எதிர்பார்க்கும் நாடுகள் அமைதியைக் குழப்பக் கூடாது என்று சீனாவுக்கு மறைமுகமான செய்தியை எடுத்துக் கூறியிருந்தார்.
அத்துடன் அத்தகைய அமைதியைக் குழப்பும் முயற்சிகளுக்கு சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்றும், 1971ம் ஆண்டு தீர்மான நிலைப்பாட்டை பேண வேண்டும் என்றும், அஜித் டோவல் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது சீன நீர்மூழ்கிகள் விவகாரத்தை மையப்படுத்தி வெளியிட்ட கருத்தாகவே கொள்ளப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று ஆரம்பமாக காலி கடற்பாதுகாப்பு மாநாட்டில், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா மற்றும் சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளும் பங்கேற்றனர்.
இந்தப் பாதுகாப்பு மாநாட்டில் 36 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இன்றுடன் இந்த மாநாடு நிறைவடையவுள்ளது.