அஸ்வர் பதவி விலகினார் – அமீர் அலி நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர், இன்று தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.இவர் தனது பதவிவிலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திசநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
அதேவேளை, இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி நியமிக்கப்படவுள்ளார்.
றிசாத் பதியுதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அமீர் அலி உள்ளிட்ட மூன்று மாகாண சபை உறுப்பினர்களும் அண்மையில் கிழக்கு மாகாணசபையில் தனித்து செயற்படப் போவதாக அறிவித்திருந்தனர்.
அமீர் அலிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாததையைடுத்தே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருந்தது.
முன்னர், அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சராகப் பதவி வகித்த அமீர் அலி, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்தப் பதவியை விட்டு விலகியிருந்தார்.
எனினும் கிழக்கு மாகாணசபையில் அவருக்கு உரிய பதவி வழங்கப்படாதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் ஐதேகவில் இணைந்து கொண்டிருந்தார்.
இதையடுத்தே, அகில இலங்கை மக்கள் காங்கிரசை திருப்திப்படுத்துவதற்காக அமீர் அலி தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டவுள்ளார்.
இதற்காகவே ஏ.எச்.எம்.அஸ்வர் பதவியை விட்டு விலகியுள்ளார்.