மேலும்

மீண்டும் அழைத்தார் மகிந்த – வாக்குறுதி வழங்காமல் நழுவினார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றுப் பிற்பகல் காத்மண்டுவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேரடியாக விடுத்துள்ள மூன்றாவது அழைப்பு இதுவாகும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவின் போது புதுடெல்லியில் வைத்து முதல் முறையாகவும், நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் போது, இடம்பெற்ற சந்திப்பில் இரண்டாவது தடவையாகவும், சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்திருந்தார்.

நேற்று மீண்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்த போது, இந்தியப் பிரதமர் தனது பயணம் குறித்த வாக்குறுதி எதையும் வழங்கவில்லை.

இந்தநிலையில், வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், தாம் மீண்டும் சிறிலங்கா அதிபராகத் தெரிவு செய்யப்பட்டால், மீண்டும் இந்தியப் பிரதமரை கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், மூன்றாவது தடவை போட்டியிடவுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *