அமெரிக்கத் தூதுவர் சிசன் ஐ.நாவுக்கான பிரதி தூதுவராகிறார் – செனட் அங்கீகாரம்
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதி தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதி தூதுவர் மற்றும், ஐ.நா பாதுகாப்புச் சபைக்கான பிரதித் தூதுவர் பதவிக்கு, மிச்சேல் ஜே சிசனின் பெயரை அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஜூலை மாதம் முன்மொழிந்திருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்க செனட் வெளிவவிவகாரக் குழு அவரது நியமனத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
இதையடுத்து, மிச்சேல் ஜே சிசன் விரைவில் புதிய பதவியைப் பொறுப்பேற்பார் என்று தெரியவருகிறது.
2012ம் ஆண்டு முன்னர் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்ற மிச்சேல் ஜே சிசன், சிறிலங்கா அரசாங்கத்துடன் கடும் போக்கை கடைப்பிடித்து வந்தவர்.
இதனால் அவ்வப்போது சிறிலங்கா அரசாங்கத்தினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தவர்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்வதாக சிறிலங்கா அமைச்சர்கள் மிச்சேல் ஜே சிசன் மீது குற்றம்சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.