கூட்டமைப்பிடம் ஆதரவு கோரி பேச்சு நடத்தமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ எந்தப் பேச்சுக்களையும் வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதுதொடர்பாக உரையாற்றும்போது,
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள வேண்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூட, கூறியுள்ளார்.
தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதை விட வேறுவழி ஏதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும்.
அங்கு தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கலாம்.
இந்தக் கருத்தை நாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த போது அவரது கருத்தும் அதுவாகவே இருந்தது.
நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அதேவேளை, அடுத்த ஆண்டு வன்முறையற்ற வழியில் போராட்டம் நடத்தப் போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
தமது அரசியல் நோக்கங்களை அடைவதற்கு, ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்துவதற்கு கூட்டமைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.