முன்றாவது முறையும் போட்டியிட முடியுமா? – உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரினார் மகிந்த
18வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய மூன்றாவது முறையாக, அதிபர் பதவிக்குத் தான் போட்டியிட முடியுமா என்பது தொடர்பான சட்ட விளக்கத்தை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
அரசியலமைப்பின் 129(1) பிரிவின் கீழ் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அரசியலமைப்பின்18வது திருத்தம் நடைமுறைக்கு வந்த நேரத்தில் தான், இரண்டாவது பதவிக்காலத்தை வகித்து வந்ததால், அந்தத் திருத்தத்துக்கமைய மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதில் சட்டரீதியான சிக்கல் ஏதும் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறும் அவர் சிறிலங்கா உயர்நீதிமன்றிடம் கேட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இந்த மனு தொடர்பாக, கருத்து தெரிவிக்க விரும்புவோர் வரும் 7ம் நாள் பிற்பகல் 3 மணிக்குள் அதனை உயர்நீதிமன்றத்திடம் எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் எம்.எம்.ஜயசேகர அறிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை திறந்த நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பது குறித்து இப்போதைக்கு தன்னால் பதில் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.