அரச செலவினம் 356 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு – வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடந்து வரும் நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுப் பிரேரணையில் சிறிலங்கா அரசாங்கம் நேற்று திருத்தங்களை முன்வைத்துள்ளது.
இதற்கமைய, அடுத்த ஆண்டுக்கான அரசாங்கச் செலவினம், 356 பில்லியன் ரூபாவினாலும், கடன்பெறும் எல்லை 440 பில்லியன் ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களை முன்வைத்த சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளார்.
இந்த திருத்தத்துக்கு அமைய, அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான கடன் பெறும் எல்லை, 1340 பில்லியன் ரூபாவில் இருந்து 1780 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசாங்கச் செலவினம், சுமார் 1812 பில்லியன் ரூபாவில் இருந்து (1,812,292,718,000), சுமார் 2168 பில்லியன் (2,168,292,718,000) ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தம் குறித்து, நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, ஐதேக உறுப்பினர் ஹர்ச டி சில்வா, வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு ஒருவாரத்தில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை, 256 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார்.