மகிந்த வீட்டுக்குப் படையெடுத்துள்ள 60 வாகனங்கள் – முடிவை சற்று நேரத்தில் அறிவிக்கிறார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கும் வாகனப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் புறப்பட்ட வாகனங்கள், தெவிநுவர விகாரையில் மத வழிபாடுகளை முடித்த பின்னர், மெதமுலானவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்றன.
சுமார் 60 வரையான வாகனங்களில், மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஜி.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, காமினி லொக்குகே, ரி.பி.எக்கநாயக்க, பந்துல குணவர்த்தன, ஜனக பண்டார, அருந்திக பெர்னான்டோ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் மத வழிபாடுகளை அடுத்து மகிநத ராஜபக்சவின் வீட்டுக்குச் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் வீட்டில் நடைபெறும் மத வழிபாடுகளில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் கலந்து கொண்டுள்ளார்.
இவர் மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத வழிபாடுகளை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் மகிந்த ராஜபக்ச தனது முடிவை அறிவிக்கவுள்ளார்.