நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் – அறிவித்தார் மகிந்த
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு விடுத்த கோரிக்கையைத் தட்டிக்கழிக்காமல் தான் ஏற்றுக் கொள்வதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மெதமுலானவில் உள்ள தனது வீட்டில் நடந்த மத வழிபாடுகளை அடுத்து, உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை நான் நிராகரிக்கமாட்டேன்.
நாட்டுக்காகவும் தாய் மண்ணுக்காகவும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எனக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை நான் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் நான் போட்டியிடுவேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியிலா அல்லது தனியான கூட்டணி அமைத்தா போட்டியிடுவார் என்பது பற்றிய கேள்விக்கு மகிந்த ராஜபக்சவின் நீண்ட உரையில் பதில் அளிக்கப்படவில்லை.
அத்துடன் அவர் பிரதமர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாகவும் கூட அறிவிக்கவில்லை.
சுமார் அரை மணிநேரம் நிகழ்த்திய உரையில், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், போன்றவை ஐதேக ஆட்சியில் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன், ஐதேக மீதான குற்றச்சாட்டுகளுக்கே முக்கியத்துவம் அளித்த மகிந்த ராஜபக்ச, தாம் எவ்வாறு போட்டியிடப் போகிறேன் என்ற விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.