சீன முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் – மைத்திரியிடம் வலியுறுத்திய சீனப் பிரதமர்
சிறிலங்காவில் சீன முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை, ஏற்படுத்துமாறும், அதனைத் தொடர்ச்சியாகப் பேணும் உறுதியான கொள்கை ஒன்றை கடைப்பிடிக்குமாறும், சிறிலங்கா அதிபரிடம், சீனப் பிரதமர் லி கெகியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று பீஜிங்கில் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு நிறுவனங்களைச் சீனா தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும், உட்கட்டமைப்பு மற்றும் கைத்தொழில் கட்டுமானங்களில் பங்கேற்கும் என்றும் இந்தச் சந்திப்பின் போது சீனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடனான பாரம்பரியமான நட்புறவுகளுக்கு சீனா எப்போதும் உயர்ந்தளவு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளதாகவும், அந்த நிலை தொடர்ந்து பேணப்படும் என்றும், மேலும் விருத்தி செய்யப்படும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மூலோபாய ஒத்துழைப்புக் கூட்டை விரிவாக்குவதற்கு, எல்லாத் துறைகளிலும் ஒத்துழைப்பு விரிவாக்கப்பட வேண்டும் என்றும் சீனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அயல்நாடுகளின் பரஸ்பரம் பொதுவான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே சீனா அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
சீனாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தனியே இரண்டு நாடுகளின் மக்களுக்கும் மட்டும் நன்மையளிப்பதாக இருக்கவில்லை. உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட, கிழக்காசியா மற்றம் தெற்காசியா ஆகிய இரண்டு பிராந்தியங்களினதும், அபி்விருத்தி, செழிப்புக்கானதாகவும் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கு சீனா வழங்கும் நீண்டகால உதவிகளுக்காக, நன்றி கூறிய சிறிலங்கா அதிபர், சிறிலங்காவின் எல்லா அரசாங்கங்களும், சீனாவுடன் நட்புறவுடன் இருந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசாங்கம், சீனாவுடன் மேலும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் என்றும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என்றும், சிறிலங்காவில் சீன முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, சீன நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழுத் தலைவரான ஷாங் டேஜியாங்கும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போதும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.