சீன – சிறிலங்கா அதிபர்கள் பேச்சில் துறைமுக நகர விவகாரத்துக்கு முக்கிய இடம்
சிறிலங்கா அதிபருக்கும், சீன அதிபருக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து கலந்துரையாடப்படும் என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் சிறப்புத் தூதுவர் லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தினால் பீஜிங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சிறிலங்கா ஊடகவியலாளர்களை நேற்றுச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
சீன நிறுவனத்தினால், சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பான மிக முக்கியமான திட்டம் என்ற வகையில், கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து, இந்தப் பேச்சுக்களில் கலந்துரையாடப்படும்.
பேச்சுக்களில் இது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும்.
எனினும், கொழும்புத் துறைமுக நகர விவகாரத்தினால், சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள பாரம்பரியமான,உறவு பாதிக்கப்படவோ, அல்லது அதற்கு சோதனை ஏற்படவோ அனுமதிக்கப்படாது.
சீனாவில் இருந்து சிறிலங்கா தொலைவில் இருந்தாலும், சீன மக்கள் சிறிலங்காவுக்குப் பரிச்சயமாகவே உள்ளனர். இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்த உயர்ந்த நம்பிக்கைகள் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும், நிதி உதவிகள் குறித்த உடன்பாட்டு விதிமுறைகளை மாற்றிக் கொள்ள சீனத் தரப்பு தயாராக இருக்கிறதா என்று, எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சீனாவின் சிறப்புத் தூதுவர் லியூ ஜியான்சோ,
“இந்த விவகாரம் தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு.
இத்தகைய கொள்கைகள், சட்டங்கள் நிலையானதாக இருக்க வேண்டும்.
இருநாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டு ஒத்துழைப்பில் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உறுதிப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.