சுரேஷ் சாலே மீது பாய்ந்த பயங்கரவாத தடைச் சட்டம்- 3 நாள்கள் தடுப்புக்காவல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார்.
சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவில் இன்று இடம்பெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிக் காவல்துறைமா அதிபர் சஜீவ மெடவத்த இதனைத் தெரிவித்தார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட விசாரணைகள் தேவை. எனவே, இந்த கட்டத்தில் விரிவான தகவல்களை வெளியிட முடியாது.
அவர் கைது செய்யப்படாவிட்டால், நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக காவல்துறையினருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்திருக்கும்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயிடம் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான விசாரணைகளின் போது, ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் சூத்திரதாரி என்று கூறப்படும் நபர் தொடர்பான தகவல்கள் கிடைக்கக் கூடும் என்றும் பிரதிக் காவல்துறைமா அதிபர் சஜீவ மெடவத்த தெரிவித்துள்ளார்.
