மேலும்

ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு, கொழும்பு மேலதிக நீதிவான் சற்று முன்னர் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பாக, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய விவகாரம் தொடர்பாக ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வந்தனர்.

தம்மைக் கைது செய்வதற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அதுகுறித்த விசாரணையை 30ஆம் நாளுக்கு ஒத்திவைத்திருந்தது.

அதேவேளை,, அவரை வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கும் உத்தரவு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜித சேனாரத்னவை, நீதிமன்ற பிடியாணை உத்தரவைப் பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் குற்ற விசாரணைத் திணைக்களத்துக்கு இன்று பிற்பகல் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து. கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தை நாடிய குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று மாலை ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவைப் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து ராஜித சேனாரத்ன எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *