சட்டமுறைகளுக்கு மாறாக நடந்த கைது
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ராஜகிரியவில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்றிரவு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்னிரவு அவரது வீட்டுக்குச் சென்ற கொழும்பு குற்றப் பிரிவு காவல்துறையினர், கைது செய்ய வந்திருப்பதாக கூறியிருந்தனர்.
அப்போது, கைது செய்வதற்கான நீதிவானின் உத்தரவு உள்ளதா, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகரிடம் பெறப்படும் அனுமதி உள்ளதா என்று சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பினார்.
எனினும் காவல்துறையினர் எந்த அனுமதிகளையும் பெற்றிருக்கவில்லை. இதையடுத்து, சம்பிக்க ரணவக்கவின் இல்லத்தில் இருந்தே காவல்துறை அதிகாரி ஒருவர், பிரதி சபாநாயகருடன் தொலைபேசியில் பேசினார்.
முறையற்ற விதத்தில் கைது செய்யப்படுவதற்கு சம்பிக்க ரணவக்க எதிர்ப்பை வெளியிட்டார்.
எனினும், குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.