மன்னார் புதைகுழி எலும்புக் கூடுகள் – கால ஆய்வு அறிக்கை தாமதம்
மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் காலத்தைக் கண்டறிவதற்கான சோதனை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இந்த அறிக்கை கடந்த 8ஆம் நாள், மன்னார் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், உரிய நேரத்தில் அந்த பரிசோதனை அறிக்கையை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தினால் சம்பந்தப்பட்ட சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் 14ஆம் நாளுக்குப் பின்னரே காபன் பரிசோதனை அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும், புளோரிடாவில் உள்ள ஆய்வகம் அறிவித்துள்ளது.
மன்னாரில் 300இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து, தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி எலும்புகளின் மாதிரிகள், அவை புதைக்கப்பட்ட காலப்பகுதியை ஆய்வு செய்வதற்காக புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கடந்த மாதம் 25ஆம் நாள் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.