தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.
இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பப்பட்டதை அடுத்து, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதையடுத்து, 6.07 மணியளவில், மாவீரர்களுக்காக துயிலுமில்லங்களிலும், நினைவிடங்களிலும், வீடுகளிலும் பொதுச்சுடர் மற்றும் ஈகச் சுடர்கள் ஏற்றப்பட்டன.
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பிரிகேடியர் தீபன், லெப்.கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.
பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர், உறவினர், மற்றும் பொதுமக்கள் கனகபுரம் துயிலுமில்லத்தில் குவிந்து, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
அதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இல்லாத துயிலுமில்லங்களிலும் இம்முறை மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகவும் பெருமளவு மக்களின் பங்கேற்புடனும் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும் இன்று காலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, மாலையிலும், நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.