சிறிலங்காவை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் – ஐ.நா பொதுச்செயலரிடம் மைத்திரி
ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில் உள்ள ஐ.நா பொதுச்செயலரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா அதிபர், கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் சிறிலங்கா அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா பொதுச்செயலருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்காக தமது அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்துலக சமூகம் சிறிலங்காவை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலரை மீண்டும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறும், அதன் மூலம் அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரில் காணும் வாய்ப்பு கிட்டும் என்றும் சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், கூடிய விரைவில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
நல்லிணக்கத்துக்கான சிறிலங்காவின் முயற்சிகளுக்கு ஐ.நா தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியைக் கட்டியெழுப்புதல், மனித உரிமைகள், ஐ.நா அமைதிகாப்பு போன்ற பணிகளில், சிறிலங்கா நல்ல முறையில் பணியாற்றுவதற்காக ஐ.நா பொதுச்செயலர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.