நீர்க்காகம் – IX கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் சிறிலங்கா படைகள்
சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘நீர்க்காகம் – IX ‘ கூட்டுப் பயிற்சி (Cormorant Strike IX) எதிர்வரும் செப்ரெம்பர் 6ஆம் நாள் தொடங்கவுள்ளது.
100இற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் படையினர் மற்றும் கண்காணிப்பாளர்களும், 2500 சிறிலங்கா இராணுவத்தினரும், 400 கடற்படையினரும், 200 விமானப்படையினரும், இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர்.
எதிர்வரும் 6ஆம் நாள் தொடங்கி, 26ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சி கிழக்கு, மத்திய, மேற்கு, மற்றும் வட மத்திய மாகாணங்களில் நடைபெறவுள்ளது.
கிளிநொச்சிப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான பயிற்சிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்பார்வையிடுவதற்கான குழுவொன்றும் சிறிலங்கா இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
மின்னேரியாவில் உள்ள நடவடிக்கைப் பணியகத்தில் இந்தப் பயிற்சி ஆரம்பித்து வைக்கப்படும்.
இந்தக் கூட்டுப் பயிற்சியில், பயிற்சியாளர்களை அனுப்பியும், கண்காணிப்பாளர்களை அனுப்பியும், அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சிங்கப்பூர், சூடான், துருக்கி, பிரித்தானியா, அமெரிக்கா, சாம்பியா, ஆகிய நாடுகள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளன.