அம்பாந்தோட்டையில் ஜப்பானிய நாசகாரி
ஜப்பானிய கடற்படையின் நாசகாரி போர்க்கப்பலான ‘ஜேஎஸ் அகிபோனோ’, நல்லெண்ணப் பயணமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய போர்க்கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய மரபுகளுக்கு அமைய வரவேற்பு அளித்தனர்.
இரண்டு நாள் பயணமாக அம்பாந்தோட்டை வந்துள்ள ஜப்பானிய போர்க்கப்பல் இன்று புறப்பட்டுச் செல்லவுள்ளது.
ஜப்பானிய போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுடன், சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அங்கு வந்துள்ள முதலாவது வெளிநாட்டுப் போர்க்கப்பல் இதுவாகும்.