ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – ஏப்ரல் 4இல் விவாதம்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபாநாயகரிடம் சமர்ப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போதே, இந்தப் பிரேரணை மீது வரும் ஏப்ரல் 4ஆம் நாள், காலை 9.30 மணி தொடக்கம், இரவு 9.30 மணி வரை- 12 மணிநேர விவாதம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.