புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு
புதிய அரசியலமைப்பை வரையும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் முழுமையான ஆதரவையும் வழங்கும் என்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.
குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களான ரொட்னி பிரீலிங்குசென், ஹென்றி கியூலர் ஆகியோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இவர்கள் நேற்றுமுன்தினம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தச் சந்திப்புகளின் போது, அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும், எல்லாப் பிராந்தியங்களின் செழிப்பை வலுப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, அமெரிக்கா முழு ஒத்துழைப்பை வழங்குவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, அரசியலமைப்பு திருத்தம், நல்லிணக்கம், நீதி, பொருளாதார செழிப்பு போன்ற சிறிலங்காவின் கடப்பாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.