மறுவாக்குப்பதிவு நடத்த தயங்கமாட்டேன் – மைத்திரிக்கு தேர்தல் ஆணையாளர் வாக்குறுதி
நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எவரேனும் தேர்தல் சட்டங்களை மீறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது, வன்முறைகள் தொடர்ந்தால் மறுவாக்குப்பதிவை நடத்தவோ தயங்கமாட்டேன் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நேற்று, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து, நீதியான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு கோரியிருந்தனர்.
எதிரணித் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், கரு ஜெயசூரிய, ரவி கருணாநாயக்க ஆகியோரை இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன்போது அரசதரப்பினால், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது குறித்த பல்வேறு முறைப்பாடுகளை எதிரணித் தலைவர்கள், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் முன்வைத்திருந்தனர்.
இதையடுத்தே, வன்முறைகள் தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவும் தங்கமாட்டேன் என்று, தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.