சிறிலங்கா துறைமுகங்களை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரான்ஸ்
சிறிலங்காவின் துறைமுகங்களில், குறிப்பாக கொழும்பு துறைமுகம் தொடர்பாக இடம்பெற்று வரும் மாற்றங்களை பிரான்ஸ் உன்னிப்பாக பின்தொடர்ந்து வருகிறது. ஏனென்றால், பிரெஞ்சு நிறுவனங்கள், இங்கு கால்வைப்பதற்கு ஆர்வம் கொண்டுள்ளன என்று சிறிலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகம் வந்துள்ள பிரெஞ்சுக் கடற்படையின் தரையிறக்க மற்றும் உலங்குவானூர்திக் கப்பலான மிஸ்ராலில், செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறிலங்கா துறைமுகங்களில் சீனாவின் தலையீடு தொடர்பாக பிராஸ் கவலை கொண்டுள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் ஆகிய துறைமுக அபிவிருத்திகளை தமது நாடு உன்னிப்பாக பின்தொடர்ந்து வருவதாக கூறினார்.
பிரான்ஸ் எப்போதுமே நலன்களை வெளிப்படுத்துவதில் மிகவும் கவனமாகவும், அவதானிப்புடனும் இருந்து வந்தது. சிறிலங்கா கடற்படையின் தேவைகள் தொடர்பாக, நாம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இந்தியப் பெருங்கடலில், ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கடற்கொள்ளை, தீவிரவாதம் என்பன இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.