போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை, போர்க்குற்ற விசாரணை எதற்கு? – ராஜித சேனாரத்ன கேள்வி
இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவுமில்லை, அவ்வாறு இடம்பெற்றதாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்தநிலையில், போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றன என்று நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை. எனவே, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் தேவையற்றது.
போர்க்குற்ற விசாரணைகள் என்கின்ற போது, புலிகளின் குற்றங்களை விசாரிப்பது யார்- அவர்களில் யாரை விசாரிப்பது- அவர்களின் தலைவர்கள் இருக்கின்றனரா?
ஆகவே நாம், யாரை யார் விசாரிப்பது என்பதற்கப்பால் இந்த நாட்டில் மீளவும் கடந்த கால நிலைமைகள் ஏற்படாத வகையில் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய வகையில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கவும் அதிகாரங்களைப் பகிரவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் கிடைக்கும் வகையிலான தீர்வொன்றை உருவாக்க இருக்கிறோம்.
மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.