ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட ‘சமுத்ரா தேவி’ – பத்தாண்டுகளின் பின்னால் அதன் நினைவுகூரும் சிறப்பு பயணம்
சமுத்திரா தேவியின் இயந்திரம் மற்றும் சேதமடைந்த இதன் பெட்டிகள் போன்றன 2008ல் மீளவும் பொருத்தப்பட்டன. பத்தாண்டுக்கு முன்னர் சமுத்திரா தேவி பயணித்த அதே நேரம் வெள்ளியன்று ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களின் உறவினர்களை ஏற்றிக் கொண்ட தெற்கிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தது.
இவ்வாறு Reuters செய்தி நிறுவனத்திற்காக DINUKA LIYANAWATTA எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் விபரித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
பத்தாண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவில் இடம்பெற்ற ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட ‘சமுத்ரா தேவி’ என்கின்ற தொடருந்தில் பயணித்தவர்களுள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்டனர்.
இதில் பயணித்த சாந்தி கலாஜ் என்கின்ற பயணி ஆழிப்பேரலையின் போது காணாமற் போன தனது கணவன் மற்றும் மகள் ஆகியோரைத் தன்னால் கண்டுபிடிக்க முடியும் என்கின்ற நம்பிக்கையில் இன்னமும் வாழ்கிறார்.
இந்திய மாக்கடலில் பத்தாண்டுக்கு முன்னர் இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தை நினைவுகூருவதற்காக வெள்ளியன்று சமுத்திரா தேவி என்கின்ற தொடருந்து சிறப்புப் பயணத்தை மேற்கொண்டது. இந்த இயற்கை அனர்த்தத்தின் போது சிறிலங்காவைச் சேர்ந்த 40,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சமுத்திரா தேவியின் இயந்திரம் மற்றும் சேதமடைந்த இதன் பெட்டிகள் போன்றன 2008ல் மீளவும் பொருத்தப்பட்டன. பத்தாண்டுக்கு முன்னர் சமுத்திரா தேவி பயணித்த அதே நேரம் வெள்ளியன்று ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களின் உறவினர்களை ஏற்றிக் கொண்ட தெற்கிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தது. 2004,டிசம்பர் 26 அன்று பயணிகளை ஏற்றிச் சென்ற தொடருந்து கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டது.
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த தொடருந்தில் பயணித்த 1270 பயணிகளில் பெரும்பாலானவர்கள் தொடருந்தின் கூரையின் மேலால் பாய்ந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வத்கு முயற்சித்தனர். ஆனால் தொடருந்துப் பெட்டிகளின் பின்புறத்திலும் தொடருந்திற்கு மேலேயும் இதேபோன்று அருகிலிருந்த கட்டடங்களுக்கும் மரங்களுக்கும் பின்னால் பாதுகாப்புத் தேடினர். தொடருந்திற்குள் இருந்த பயணிகள் கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டனர்.
சமுத்திரா தேவித் தொடருந்தில் பத்தாண்டின் முன்னர் ஆழிப்பேரலை இடம்பெற்ற போது பயணித்தவரும் இதன் பத்தாண்டை நினைவுகூருவதற்காக வெள்ளியன்று இதே தொடருந்தில் பயணித்தவருமான 55 வயதான கலாஜ் என்பவர் தனது கணவன் சிலவேளைகளில் இறந்திருக்கலாம் எனவும் ஆனால் தனது இளைய மகள் தற்போதும் உயிருடன் வாழ்வதாகவும் நம்புகிறார்.
“எனது இளைய மகள் இங்கு வரலாம் என்கின்ற எதிர்பார்ப்புடனேயே நான் வந்துள்ளேன். ஆழிப்பேரலை என்கின்ற துன்பியல் சம்பவத்தால் எனது மகள் சுயநினைவை இழந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்” என கலாஜ் குறிப்பிட்டார்.
தொடருந்தில் பயணித்த பெருமளவான பயணிகள் தமது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் எனவும் ஆனால் வெளியில் என்ன நடக்கின்றது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை எனவும் 58 வயதான தொடருந்துப் பாதுகாவலர் வணிகரட்ன கருணாதிலக கூறினார். “நான் ஒரு யன்னலின் ஊடாக தொடருந்தை விட்டு வெளியேறி தொடருந்தின் மேற்பகுதிக்குச் சென்று என்னால் இயன்றளவு பலரின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்தேன். அதன் பின்னர் தொடருந்து நீரில் மிதக்கத் தொடங்கியது” என கருணாதிலக தெரிவித்தார்.