ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா நெருங்கி விட்டது – ஐரோப்பிய ஒன்றியம்
மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளால் 2010ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா மீளப்பெறுகின்ற கட்டத்தை நெருங்கி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொன்லன்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
பிரசெல்சுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அராஜகம், சர்வாதிகாரத்தில் இருந்து விடுபட்டு நல்லாட்சியை உறுதிப்படுத்துவதை நோக்கி சிறிலங்கா முன்னகர்வதையிட்டு ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சியடைவதாகவும், அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு தாம் ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொன்லன்ட் டஸ்க் தனது ருவிட்டர் பதிவில்,சிறிலங்காவில் நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்கும் என்றும், சிறிலங்காவுடன் இருதரப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவரை சிறிலங்காவுக்கு வருமாறும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள டொன்லன்ட் டஸ்க் அடுத்த ஆண்டு கொழும்பு வருவதாக உறுதியளித்திருக்கிறார்.