டில்ருக்சியின் பதவிவிலகலை ஏற்றுக் கொண்டார் சிறிலங்கா அதிபர்
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விரைவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் தமது அமைச்சரவை சகாக்களிடம் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் இலங்கை மன்றக் கல்லூரில் அண்மையில் தாம் நிகழ்த்திய உரை தொடர்பாக சிறிலங்கா அதிபர் விளக்கமளித்துள்ளார்.
தாம் கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்ற முனையவில்லை என்றும் கூறியுள்ள அவர், அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை செய்தபோது அங்கு 15 வரையான காவல்துறை விசாரணையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.
கோத்தாபய ராஜபக்சவுடன் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளின் கௌரவம் பாதிக்கப்படுவது பற்றியே தாம் பேசியதாகவும் சிறிலங்கா அதிபர் நியாயப்படுத்தியுள்ளார்.