நாடாளுமன்ற வளாகத்தில் ரஞ்சன் ராமநாயக்க – மகிந்தானந்த கைகலப்பு
சிறிலங்காவின் பிரதி்அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேக்கும் இடையில் நாடாளுமன்ற அவைக்கு வெளியே நேற்று கைகலப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும், மகிந்தானந்த அளுத்கமகேயின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, ஆனந்த அளுத்கமகேயும் இணைந்து, முன்னைய ஆட்சிக்காலத்தில் கொலைகள் மற்றும் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட- போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட டிபென்டர் வாகனம் ஒன்று மாதிவெலவில் உள்ள மகிந்தானந்த அளுத்கமகேயின் வசிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று காண்பித்திருந்தனர்.
இதையடுத்து அவர்கள் நாடாளுமன்றத்துக்குத் திரும்பிய போது, மின்உயர்த்திக்காக காத்திருந்தனர். அப்போது மின்னுயர்த்தி மூலம் கீழே வந்த மகிந்தானந்த அளுத்கமகே, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் வாக்குவாதம் செய்தார்.
இந்த வாக்குவாதம், கைகலப்பு வரை சென்றதாகவும், கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் ஏசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அங்கு நின்ற ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க, குமார வெல்கம, ரஞ்சித் சொய்சா உள்ளிட்டவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாய்த்தர்க்கத்தின் போது, டிபென்டர் வாகனம் பற்றிய தகவலை மகிந்தானந்த அளுத்கமகேயின் மனைவியே வெளியிட்டதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தாம் கைலப்பில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்கவும், மகிந்தானந்தவும், வாய்த்தர்க்கத்தில் மட்டுமே ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.