பிரகீத் எக்னெலிகொட கடத்தல்- புலனாய்வுப் பிரிவு தலைவர்களிடமும் விசாரணை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் மற்றும் தற்போதைய இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர்எஸ் சாலி, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோரிடமே இந்த வாரம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
பிரகீத் எக்னெலிகொட விவகாரம் மட்டுமன்றி, வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டது குறித்தும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரரைண நடத்தப்படவுள்ளது.
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோருக்கும் விளக்கமளிக்கப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.