சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்கத்தில் அமெரிக்கா உறுதி – தோமஸ் சானொன்
சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்கம், சுபீட்சம் ஆகியவற்றில் அமெரிக்கா உறுதி பூண்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராகப் பதவியேற்கவுள்ள தோமஸ் சானொன் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக நேற்று மாலை கொழும்பு வந்த அவர், இன்று கிழக்கில் யுஎஸ்எயிட் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களைப் பார்வையிடுவதற்காகவும், சிவில் சமூகத்துடன் கலந்துரையாடுவதற்காகவும் திருகோணமலைக்குப் பயணம் மேற்கொண்டார்.
கொழும்பில் இருந்து விமானம் மூலம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சிறிலங்கா, அமெரிக்க அதிகாரிகளுடன் திருகோணமலை சென்றிருந்தார்.
அங்கு நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே, சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்கம், சுபீட்சம் ஆகியவற்றில் அமெரிக்கா உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்தார்.
அதேவேளை, சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
மனித உரிமைகள், நல்லிணக்கம், இடைக்கால நீதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சிவில் சமூகத்தினரின் கருத்துக்களை தோமஸ் சானொன் கேட்டறிந்தார்.
இதையடுத்து திருகோணமலையில் உள்ள கொமன்வெல்த் போர் வீரர்களின் கல்லறைத் தோட்டத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
அதேவேளை, நாளை சிறிலங்கா அதிபரையும், பிரதமரையும் தோமஸ் சானொன் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.