நினைவுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி
தாயக விடுதலைக்காக களமாடி மடிந்த வீரர்களை நினைவுகூரும், மாவீரர் நாள் இன்று தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
தாயக நேரப்படி இன்று மாலை 6.05 மணியளவில் மாவீரர்கள் நினைவாக மணிஒலி எழுப்பப்பட்டதையடுத்து, 6.06 மணியளவில் ஒரு நிமிட மௌனவணக்கம் செலுத்தப்பட்டது.
இதையடுத்து, மாலை 6.07 மணியளவில், தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களிலும், வீடுகளிலும், தமிழ் மக்கள் மாவீரர் நினைவுச் சுடர்களை ஏற்றி வணக்கம் செலுத்தினர்.
இதையடுத்து, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தாயகத்தில், கெடுபிடிகளுக்கு மத்தியிலும், மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இன்று மாலை இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், யாழ்.பல்கலைக்கழக மாவீரர் நினைவிடத்தின் முன்பாகவும், கைலாசபதி அரங்கின் மேற்தளத்திலும், மாவீரர் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலும், இன்று மதியம் யாழ் பல்கலைக்கழகத்திலும் மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.