மகிந்தவின் எதிர்ப்பினால் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு
ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தரப்பு சட்டவாளர்கள் தெரிவித்த எதிர்ப்பினால், அவரிடம் இன்று நடத்தப்படவிருந்த விசாரணைகள் நாளைக்குப் பிற்போடப்பட்டுள்ளன.
சுயாதீன தொலைக்காட்சியில், அதிபர் தேர்தல் பரப்புரை விளம்பரங்களை ஒளிபரப்பி 200 மில்லியன் டரூபா இழப்பை ஏற்படுத்தியதாக மகிந்த ராஜபக்ச மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று இரண்டாவது கட்ட விசாரணைக்காக அதிபர் ஆணைக்குழு, மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இன்று காலை 8.55 மணியளவில் அவர் ஆணைக்குழுவுக்கு வருகை தந்தார்.
எனினும், ஆணைக்குழுவில், மேல் நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பதற்கு, மகிந்த ராஜபக்சவின் சட்டவாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவர்கள் குறிப்பிட்டனர். இதனால், ஆணைக்குழுவின் விசாரணைகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டன.