மேலும்

பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைக்க சிறிலங்கா- பாகிஸ்தான் இணக்கம்

பாகிஸ்தானும் சிறிலங்காவும்,  உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, கொழும்பில் சிறிலங்காவின் உயர்மட்டத் தலைவர்களுடன் இன்று நடத்திய சந்திப்புகளின் போதே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த ஆகியோரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி  சந்தித்துப் பேசியுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சில், இடம்பெற்ற சந்திப்பின் போது,  உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆனந்த விஜேபாலவும்,  மொஹ்சின் நக்வியும் கலந்துரையாடினர்.

சைபர் குற்றம் மற்றும் நிதி மோசடி வலையமைப்புகளை எதிர்ப்பதற்கான கூட்டு உத்தியை உருவாக்குவது குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இரு நாடுகளின் உள்துறை அமைச்சுக்களுக்கு இடையில் நிறுவன ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

காவல்துறை மற்றும் துணை இராணுவப் படைகளுக்கான கூட்டுப் பயிற்சித் திட்டங்கள் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பாகிஸ்தானின் தேசிய காவல்துறை அகாடமியில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வாய்ப்புகளை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி வழங்கினார்.

இது அதிகாரி பரிமாற்ற திட்டங்கள் தொழில்முறை திறனை மேம்படுத்தவும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைத் திறக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார்.

சைபர் குற்ற மற்றும் நிதி குற்றங்களை திறம்பட சமாளிக்க ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், பாகிஸ்தான் அமைச்சர் நக்வி, சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரை பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சிறிலங்காவின் உறுதிப்பாட்டை அமைச்சர் ஆனந்த விஜேபால மீண்டும் உறுதிப்படுத்தினார்.

விளையாட்டு அமைச்சர் கமகேயுடனான தனி சந்திப்பில், விளையாட்டுகளில், குறிப்பாக துடுப்பாட்டத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினார்.

அதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் சம்பத்  துயகொந்தாவுடனான சந்திப்பின் போது, ​​இரு தரப்பினரும் பாகிஸ்தான்-சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு விடயங்களை மறுபரிசீலனை செய்தனர்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

சிறிலங்காவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்ட சிறிலங்கா  பாதுகாப்பு செயலாளர், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவாக இருப்பதாகவும்,  மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பாகிஸ்தானின் உறுதிப்பாட்டையும் நக்வி மீண்டும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *