அல்லைப்பிட்டியில் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி
யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான சிற்றுந்து ஒன்றை சிறிலங்கா காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது, நிறுத்தாமல் மண்டைதீவு நோக்கித் தப்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து, மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்து விட்டு அல்லைப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த, ஊர்காவற்றுறை காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் வாகனத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.
அந்த வாகனம், தப்பிச் சென்ற சிற்றுந்தை நிறுத்த முயற்சித்த போதிலும், அது நிறுத்தாமல் தப்பிச் சென்றதால், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சிற்றுந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிற்றுந்தில் இருந்த இரண்டு பேர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

