அமுல் செல்லும் ரில்வின் சில்வா – ரத்து செய்த உடன்பாட்டை புதுப்பிக்க திட்டமா?
இந்தியாவின் அமுல் நிறுவனத்துடனான உடன்பாட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் ஏற்பாட்டில் ஒரு வாரகாலப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர், இந்தியாவின் அமுல் பால் கூட்டுறவு நிறுவனத்திற்கும் பயணம் செய்யவுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கும் சிறிலஙகாவின் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை மற்றும் மில்கோ நிறுவனத்திற்கும் இடையிலான, கூட்டு உடன்பாட்டை செய்து செய்திருந்தது.
முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இணைந்து, மில்கோ மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளை இந்தியாவின் அமுல் பால் கூட்டுறவு நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும், அமைச்சரவைப் பத்திரத்தை 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்தனர்.
99 ஆண்டு குத்தகை உடன்பாட்டு விதிமுறைகளின் கீழ், அமுல் நிறுவனம் 52% பங்குகளையும், சிறிலங்கா பங்குதாரர்கள் 48% பங்குகளையும் கொண்டிருக்கும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த உடன்பாட்டை ரத்து செய்தது.
ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவினர் அமுல் நிறுவனத்திற்கு பயணம் மேற்கொள்வதால், சிறிலங்கா அரசாங்கம் இந்த உடன்பாட்டை புதுப்பிக்கத் திட்டமிடுகிறதா என்ற சந்தேகங்கள் எழுந்திருந்தன.
எனினும், அமுல் நிறுவனத்துடனான உடன்பாட்டை புதுப்பிக்க அரசாங்கம் திட்டமிடவில்லை என்றும், மில்கோ மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை என்பன இலாபத்தில் இயங்குவதாகவும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
