முக்கிய வழக்குகள் குறித்து ஆலோசனை வழங்க உயர்மட்டக் குழு
முக்கியமான மற்றும் கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து, ஆலோசனை வழங்குவதற்காக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தலைமையிலான ஒரு குழுவொன்றை சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க நியமித்துள்ளார்.
காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பிரியந்த பண்டார, மூத்த அரசு சட்டவாளர் ஜெயந்தி வேகொடபொல மற்றும் அரச சட்டவாளர் சக்தி ஜகொடஆரச்சி ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில் உள்ள கடுமையான குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்யும் போது, எந்த சட்டக் குறைபாடுகளும் ஏற்படாமல் இருப்பதை இந்தக் குழு உறுதி செய்யும்.
விசாரணையின் போது, எழக்கூடிய எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கத் தேவையான அவசர ஆலோசனைகளையும் இந்தக் குழு வழங்கும் என்று சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
