மேலும்

பேரிடரை எதிர்கொள்ளத் தயார் நிலையில் சிறிலங்கா

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் நிலையில், பேரிடர் மீட்பு வசர நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அமைப்பு இன்று கிழக்கு கடற்கரையை அடையும் என்று வானிலை ஆய்வுத் துறையின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.

இந்த அமைப்பு ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, தீவு முழுவதும் மோசமான வானிலையை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மாகாணத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நாளை அதிக மழை பெய்யும் அபாயம் உள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டி மாவட்டத்தில் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் நிலந்தன்தஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் நிலச்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த நிலையில்,  பேரிடர் தொடர்பான தேவையான அனைத்து எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக  பேரிடர் முகாமைத்துவ மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் வானிலையின் முன்னேற்றத்தைப் பொறுத்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற அவசர குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டம் பெரும் வெள்ள அபாயத்தை சந்திக்க கூடும் என்றும், வட மாகாணத்தில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 650 மி.மீ மழையை பெறக் கூடும் என்றும், கிழக்கு மாகாணத்தில் 550 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என்றும் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *