மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் வீதியை திறக்க முடியாது – கைவிரித்த சிறிலங்கா அமைச்சர்
வவுனியாவில், மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் பிரதான வீதியை மீண்டும் திறக்க முடியாது என சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வவுனியாவில் உள்ள பொதுமக்களின் காணிகள், மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடம் உட்பட, சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர,
நடைமுறையில் உள்ள பாதுகாப்புக் காரணங்களுக்காக , தற்போது மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் பிரதான வீதியையோ, அதனை அண்டிய காணிகளையோ விடுவிப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
குறித்த வீதிக்குப் பதிலாக மாற்று வழிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இருப்பதாகவும், அவர் கூறினார்.
அதற்கு, இந்த மாற்று வழிகள் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருத்தமானவை என்று மருத்துவர் சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார்.
