திரிவைச்சகுளத்தில் சிங்கள குடியேற்றத்துக்காக 300 ஏக்கர் காடுகள் அழிப்பு
வவுனியா வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான திரிவைச்சகுளம் பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
வெடிவைத்தகல்லு பகுதியில் உள்ள திரிவைச்சகுளம் பகுதியில் காணி உரிமையாளர்களான தமிழர்கள் 2019ஆம் ஆண்டு காணிகளை துப்புரவு செய்த போது வனவளத் திணைக்களம் அவர்களை தடுத்து அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
தற்போது 300 ஏக்கருக்கும் மேற்பட்ட காடுகள் மகாவலி எல் வலயம் என்ற பெயரில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
எனினும் வனவனத் திணைக்களத்திடம் எந்த அனுமதியும் பெறப்பட்டிருக்கவில்லை என்றும் தெரியவருகிறது.
திரிவச்சகுளத்தில் காடுகளை அழித்து மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுவ சிறிலங்காவின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2021, 2022 காலப்பகுதியில், வவுனியா வடக்கில் 5259.93 ஹெக்ரெயர் காணிகள் மகாவலி எல் வலயத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் வனவளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வவுனியா வடக்கு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சஞ்சுதன் மற்றும் உறுப்பினர்கள், அழிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பாக பிரதேச செயலர் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளுடனும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தப் பகுதியில் சுமார் 2 கிலோ மீற்றர் வரை காடுகள் அழிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்ததாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சஞ்சுதன் தெரிவித்துள்ளார்.