மேலும்

சிறிலங்காவைப் பாராட்டிய ரஷ்ய தூதுவர்

ரஷ்ய போரில் சிறிலங்கா நடுநிலையான நிலைப்பாட்டை, எடுத்திருப்பதற்கு, சிறிலங்காவிற்கான ரஷ்ய தூதுவர் லெவன் சஹாகார்யன் (Levan Dzhagaryan), நன்றி தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொது நூலகத்தில் இன்று ரஷ்ய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட,  ரஷ்யாவின் 80வது வெற்றி நாளை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“ரஷ்யா-உக்ரைன் போர் என்ற வார்த்தையே தவறானது. இந்த மோதல் ரஷ்யாவுக்கு எதிரான, மேற்கத்திய நாடுகளின் கூட்டு ஆக்கிரமிப்பு ஆகும்.

அணுசக்தி வல்லமை பெற்ற ரஷ்யாவுக்கு,  உக்ரைனின் பொம்மை ஆட்சியை மற்றும் அதன் வெளிநாட்டு ஆதரவாளர்கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைத் தோற்கடிக்கும் அளவுக்கு வல்லமை உள்ளது.

உக்ரைனில் மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கை, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய மக்களின் உயிர்களையும் நலன்களையும் பாதுகாப்பதற்காக மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளுக்கு எதிராக, ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஆகும்.

சில ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது தற்போதைய அமெரிக்க நிர்வாகம் மிகவும் யதார்த்தமான கொள்கையை நோக்கி நகர்ந்திருக்கிறது.

நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்கள் பாதுகாப்பு கவலைகள் மதிக்கப்பட வேண்டும்.

இரண்டாம் உலகப்போரின் போது நாங்கள் 27 மில்லியன் மக்களை இழந்து விட்டோம்.  அதனை ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.

துரதிர்ஷ்டவசமாக, ஐரோப்பாவில் நாசிசத்தின் வேர்களை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை, அதனால்தான் இன்று, சில ஐரோப்பிய நாடுகளில் பாசிசத்தின் மறுமலர்ச்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அனைத்து மக்களையும் மதிக்கிறோம், அனைத்து நாடுகளையும் மதிக்கிறோம்.

ஆனால் எங்கள் கோரிக்கை என்னவென்றால், தயவுசெய்து ரஷ்யாவின் கவலைகளை மதிக்கவும், ரஷ்ய இறையாண்மையை மதிக்க வேண்டும்.

நாங்கள் போதுமான வலிமையுடன் இருக்கிறோம், இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்றும் சிறிலங்காவுக்கான  ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *