மேலும்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சம்பத் துயகொந்த, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் ஆசிப்பை இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான்- சிறிலங்கா இடையிலான 5 ஆவது பாதுகாப்புக் கலந்துரையாடலின், இரண்டாவது நாளான இன்று, இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த உயர்மட்ட சந்திப்பு, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பு குறித்த பரஸ்பர புரிதலை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது என சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் பரஸ்பர மதிப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பில் நீண்டகால உறவைப் பகிர்ந்து கொள்கின்றன.

தெற்காசிய பிராந்தியத்தில் உறுதித்தன்மையைப் பேணுவதிலும் அமைதியை மேம்படுத்துவதிலும் கூட்டாண்மைகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இந்த உரையாடல் பிரதிபலிக்கிறது.

புதன்கிழமை முடிவடையும் மூன்று நாள் கலந்துரையாடல், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் பரந்த பிராந்திய பாதுகாப்பு நோக்கங்களுக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவும் பங்கேற்றுள்ளார் என, பாகிஸ்தான் பொயின்ற் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, ​​பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் வெளிப்படுத்தியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சிறிலங்காவின் தேசிய  பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இன்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாத இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருகின்ற நிலையில், சிறிலங்கா- பாகிஸ்தான் இடையில் இந்த உயர்மட்டச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *