மேலும்

தூதரக பணியாளர் கடத்தல் – ராஜித சேனாரத்னவிடம் விரைவில் விசாரணை

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணை நடத்தவுள்ளது.

சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியிடம் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெரும்பாலும், இந்த வார இறுதியில் ராஜித சேனாரத்ன விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தக் கடத்தல் குற்றச்சாட்டு புனையப்பட்ட ஒரு கதை என்ற முடிவுக்கு வந்துள்ள குற்ற விசாரணைப் பிரிவினர், இந்த விவகாரத்துக்கும் ராஜித சேனாரத்னவுக்கும் தொடர்பு உள்ளதா எனக் கண்டறியவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளரின் வாய்க்குள்,  கைத்துப்பாக்கி வைத்து அச்சுறுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *