மேலும்

சுவிஸ் தூதரகப் பணியாளரிடம் இன்றும் தொடர் விசாரணை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும், கொழும்பில் உள்ள சுவிஸ்  தூதரக பணியாளரிடம், இன்று மூன்றாவது நாளாகவும், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த 25ஆம் நாள் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகவும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் நேற்று முன்தினம் நீதிமன்றக் கட்டளைக்கு அமைய குற்ற விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையானார்.

கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரகப் பணியாளரிடம், நேற்று முன்தினம் மாலை 5 மணி தொடக்கம், நேற்று அதிகாலை 2 மணி வரை சுமார் 9 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதையடுத்து, நேற்று மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். நேற்று பிற்பகல் விசாரணைக்கு முன்னிலையான அவரிடம், குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள், ஆறு மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரிடம் அனுப்பப்பட்டு மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

இன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர் காலையில், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையானார்.

நான்கு மணிநேரம் விசாரணைகள் நடத்தப்பட்டதை அடுத்து இன்று பிற்பகல் அவர், அங்கிருந்து வெளியேறினார்.

சுவிஸ் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புடன், முகத்தை மூடி மறைத்தவாறு அவர் விசாரணைகளுக்கு முன்னிலையாகி வருகிறார். அவருக்கு  உதவியாக இரு சட்டவாளர்களும் சமூகமளித்து வருகின்றனர்.

அதேவேளை, சுவிஸ் தூதரக பணியாளரை வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதிமன்றம் விதித்த தடை வரும் 12ம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *